நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்ஸேவை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. (he was found guilty of conspirancy and sentenced to jail for life) பின்னர் 1965ல் அவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு 2005ல் பூனாவில் இயற்கை எய்தினார்.
தெலுகு தேசக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பரிதலா ரவியை கொல்ல முயன்ற வழக்கில் "இனி வாழ்நாள் முழுவதும் சிறையில் வாழ வேண்டும்" என்று தீர்ப்பளிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சூரிய நாராயண ரெட்டி, சிறையில் இருந்தபடியே மீண்டும் ரவியை கொன்ற வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு அவ்வழக்கு இன்றுவரை நிலுவையில் உள்ளது. அப்படிப்பட்ட சூரியை 2009 அக்டோபர் 2, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆந்திர அரசு விடுதலை செய்தது.
மதுரை வில்லாபுரம் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் கவுன்சிலர் லீலாவதியை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட முருகன் எனும் சொங்கு முருகன், மீனாட்சிசுந்தரம், மருது எனும் நல்லமருது ஆகியோரை அண்ணா பிறந்த நாளான 12-09-2008ல் அன்றைய திமுக அரசு விடுவித்தது.
இது போன்ற பற்பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும்போதெல்லாம் பொங்காத ராகுல் காந்தி, இப்போது ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 23 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்தவர்களை சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி விடுவிப்பதை
“முன்னாள் பிரதமரும், என்னுடைய தந்தையுமான ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் முடிவு, எனக்கு கவலை அளிக்கிறது. பிரதமரைக் கொலை செய்த சில நபர்களே விடுதலை செய்யப்படுகிறார்கள் என்றால், சாமானிய மனிதர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? இந்த நாட்டில், பிரதமருக்குக் கூட நீதி கிடைக்கவில்லை. இது என் மனதின் குரல். நான் மரண தண்டனை மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அது, என் தந்தையை மீண்டும் கொண்டுவந்து கொடுக்காது. ஆனால், இது என் தந்தையோ அல்லது குடும்பமோ சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. இது, ஒரு நாட்டின் விவகாரம்”
என்றெல்லாம் வசனம் பேசும் வருங்கால பிரதமரே, முதலில் உங்களின் சட்ட அமைச்சர் "நோ லாஸ்" கபில் சிபல் அவர்கள் கூறுவதை பொருமையாக கேட்டு பின்னர் பொங்குங்கள்!
“ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித சலுகையும் அளிக்கப்படக் கூடாது என்பதே அட்டர்னி ஜெனரலின் வாதமாக இருந்தது. ஆனால் தற்போது நீதிமன்றம் ஒரு முடிவை எடுத்து தீர்ப்பை அறிவித்துள்ளது. விருப்பம் இருக்கிறதோ இல்லையோ நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடந்தாக வேண்டும். எனவே மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடக்கும்.”
இல்லே உங்கப்பா என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?
இந்திய மீனவரை கொன்ற இத்தாலிய படைவீரர்களை ஜாமினில் செல்ல அனுமதித்துவிட்டு, இப்போது "கடல் கொள்ளை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படாது" என மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இத்தாலி வீரர்கள், மரண தண்டனையிலிருந்து தப்பியுள்ளனர். இதற்கு முதலில் ஒரு பதிலை சொல்லுங்கள் ராகுல்ஜீ! பிறகு நாட்டின் விவகாரம் பற்றியும் தந்தை/குடும்ப விஷயம் பற்றியும் பேசலாம்.
இல்லே உங்கப்பா என்ன இந்த மீனவரைவிடவும், லீலாவதியைவிடவும், பரிதலா ரவியைவிடவும் இல்லையில்லை தேசத்தந்தை காந்தியைவிடவும் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?