Wednesday 14 September 2016

அன்னை தெரேசாவை கவுரவித்த மண், சகோதரி நிவேதிதாவை புறக்கணித்தது ஏன்?

கடந்த திங்கட்கிழமை (13-09-2016) மாலை  நாடகம் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.  நண்பனின் நீண்ட நாள் வற்புறுத்தலுக்கு பிறகு, "சரி, நாடகம்தானே, பார்த்துவிடலாம்" என்று எண்ணி சென்னை நாரதகான சபாவுக்கு குடும்பத்தோடு பயணித்தேன்.  வற்புறுத்திய நண்பனை அழைத்து என்னுடைய வருகையை உறுதி செய்துவிட்டு "டிக்கெட் கேட்டால் என்ன செய்வது?" என்று மறுபடியும் கேட்டதற்கு, "என் பெயரை கூறு, டிக்கெட் எடுக்கவேண்டிய தேவையேற்படாது" என்று கூறிய வார்த்தையால் மகிழ்ந்தேன்.  (அதாவது ஓஸீ-யில் நாடகம் பார்க்க வாய்ப்பு கிடைத்ததால் குடும்பத்தோடு சென்றேன்) 

நாடகம் "சகோதரி நிவேதிதா"


விவேகானந்தரை லண்டனில் சந்தித்து பின் சேவை செய்வதற்காக இந்தியா வந்து,  புதுமைப்பெண் கண்ட நம் முண்டாசுக் கவிஞருக்கு உந்துதலாக இருந்த ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் அற்புதமாகவும் அதே நேரத்தில் சற்றும் அலுப்பு ஏற்படாமலும் நாடகமாக்கிய குழுவிற்கு முதலில் எனது பாராட்டுக்களை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.




ஒரு வரலாற்றை கூறும்போது அதில் நம் சமகாலத்து இளைஞ்சர்களுக்கு ஒரு சுவாரசியம் ஏற்படுத்துவதற்காக மகாகவி பாரதியையே நாடகம் முழுவதிலும் வியாபிக்கவைத்து அவர் மூலமாகவே கதையை நகர்த்திய விதம் மிகவும் புதுமையாக இருந்தது.  நடித்த அனைத்து பாத்திரங்களும் நாடகத்திற்கு உயிர் கொடுத்தனர் என்றால் அது அந்த குழுவினர்க்கு நான் கொடுக்கும் மிக மிக குறைந்த விமர்சனமே!  முதல் காட்சியில் தோன்றும் விவேகானந்தர் அசத்தியேவிட்டார்.  பாரதி, நிவேதிதா, ஹோலி மதர், ராமகிருஷ்ணர் என்று நடித்த அனைவரையும் இங்கே குறிப்பிட்டேயாகவேண்டும்.  அனைவரும் பாத்திரமறிந்து அவ்வாறே மாறிவிட்டனர்.  நடிகர்களை தேர்ந்தெடுத்தற்காகவும் அவர்களை பாத்திரங்களாக வாழவைத்தமைக்காகவும் ஹாட்ஸ் ஆஃப் டு யூ, இயக்குனர் கே.விவேக் ஷங்கர்!




மார்கெரட் எலிஸபெத் நோபல் என்ற ஒரு புண்ணிய ஆத்மாவை சகோதரி நிவேதிதாவாக மாற்றிய சுவாமி விவேகானந்தர்!  தன்னையே நிவேதிதாவாக்கி தன் நாட்டையும் குடும்பத்தையும் விட்டு இந்தியா வந்து, இங்கு தான் பிறந்த மதத்தை போதிக்காமல் இங்குள்ள மக்களுக்கு கல்வி என்ற ஒளிவிளக்கை ஏற்ற வந்து அதற்காகவே வாழ்ந்து மறைந்த நிவேதிதா! பெண் விடுதலையையும் சுதந்திர பாரதத்தையும் புரிந்து பாடிய பாரதி!  இப்படி பல வரலாற்று விஷயங்களை புரிய வைத்தது இந்த நாடகம்.  




நிவேதிதாவாக நடித்தவரின் நடிப்பை பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். சுவாமி உலகைவிட்டு மறைந்தார் என்பதை கேள்விபட்டு, அன்னையிடம் வந்து அந்த அழும் காட்சி.  அவர் தன் முதுகைத்தான் நமக்கு காண்பிக்கிறார். ஆனாலும் அவரின் முழு உடலும் குலுங்குகிறது.  இப்படி செய்ய அவர் சகோதரியாக வாழ்ந்ததாலேயே முடிந்திருக்கும்.  எக்ஸெலெண்ட் பெர்ஃபார்மன்ஸ் நிவேதிதா!




அடுத்ததாக பாரதியாக நடித்தவர்.  இத்தனை நாட்களாக பாரதி என்றால் நம் கண் முன் நிற்கும் ஒரே உருவம், நடிகர் சுப்பையா.  இதோ இந்த தலைமுறைக்கு பாரதி என்றால் நண்பன் மது!  நம் மனக்கண்ணில் நிற்கும் அதே கம்பீரம்... அதே வார்த்தை பிரயோகம்... அதே உடலசைவு... நண்பா நடிகண்டா நீ!!




நாடகம் முடிந்து வீடு திரும்பும்போது மனதில் ஏற்பட்ட ஒரு கேள்வியே இந்த பதிவின் தலைப்பு!  இந்த சந்தேகத்திற்கு பதில் இருந்தால் நண்பர்களே விளக்கவும்.


3 comments:

  1. நாடகத்தை பார்க்க விரும்புபவர்கள் கீழே உள்ள லின்க்கில் கிளிக்கவும்!

    https://www.youtube.com/watch?v=UrxPWFqJg18

    ReplyDelete
  2. Thanks for coming and for your review

    ReplyDelete
  3. நலமா நண்பரே ?

    இந்திய தேசத்தின் மீது ஈர்ப்பும் பற்றும் கொண்டு இந்நட்டின் மக்களுக்காக தங்களின் வாழ்வையே அர்ப்பணித்த பல நிவேதிதாக்கள் இன்றும் சிறப்பிக்கப்படவில்லை என்பது சோகம் !

    ஒரு நல்ல நாடகத்தை சிறப்பாக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

    சாமானியன்

    எனது பயணப்பதிவின் இரண்டாம் பாகம்... தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    http://saamaaniyan.blogspot.fr/2016/05/2.html

    ReplyDelete